புதன், 25 மே, 2011

8. உருவ ஆளுமை

உருவ ஆளுமை உடை, உடல்நலன், தொற்றப்போளிவால் முடிவு செய்யப்படுகிறது. உருவ ஆளுமையை ஒப்பனை மூலம் உருவாக்கலாம். ஆனால் அது போலியான ஆளுமை என்பது உடனே வெளிப்பட்டுவிடும்.

முருங்கைக்காய் போல கைகள் உள்ள ஒரு நடிகன் காவல்துறை அதிகாரி வேடத்தில் பாத்து பேரை புரட்டி பந்தாடுகிறான், உண்மையான சண்டையாய் அது தோன்றாமல் நமக்கு அது நகைச்சுவை காட்சியாய் தோன்றக் காரணம் அவன் உருவ ஆளுமை போலியானது என்பதாலேயே!

அறுபது வயது நெருங்க உள்ள கிழ நடிகன் உலகில் உள்ள முகப்பூச்சை எல்லாம் முகத்தில் அப்பிக் கொண்டு பதினெட்டு வயது நடிகையுடன் காதல் பாட்டு பாடுகிறான். எவ்வளவு முயன்று கற்பனை செய்தாலும் அவர்கள் நம் பார்வைக்கு காதலர்களைப் போல் தோற்றமளிப்பது இல்லை. தாத்தாவும் பேத்தியும் போல் தோன்றக் காரணம் உருவ ஆளுமை போலியானது என்பதாலேயே!

உருவ ஆளுமையில் முதன்மையானது உடை.

"ஆள்பாதி ஆடைப்பாதி" என்ற நம் முன்னோர் முதுமொழி ஆடையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்.

"கந்தையானாலும் கசக்கிக் கட்டு" என்ற ஒளவையின் பொன்மொழி உடையை எப்படி நேர்த்தியாய் உடுக்க வேண்டும் என்பதை புரியவைக்கும்.

"காந்தியைப் போல் நீங்கள் ஏன் எளிமையாய் உடுப்பதில்லை?" என அண்ணல் அம்பேத்காரை கேட்டனர். அதற்க்கு அவர், "காந்தி கந்தை துணியை கட்டினாலும் அது எளிமை என பெருமைப்படுவர். என்னைப்போல் அடித்தட்டு உழைக்கும் வர்கத்திலிருந்து முயன்று படித்து உயர்ந்த பட்டங்களை பெற்றவர் கந்தை துணியை கட்டினால் அதை ஏளனமாகவே பார்ப்பார். நேர்த்தியான உடை என்பது எமது மக்களுக்கு மிக மிக அவசியம்" என பதிலளித்தாராம் அண்ணல் அம்பேத்கார்.

உடைக்கு அடுத்து நல்ல உடல் நலன். "மிகினும் குறையினும் நோய் செய்யும்" என்பார் திருவள்ளுவர்.

உணவு, உழைப்பு, உறக்கம். இவை மூன்றும் குறைந்தாலும் நோய்! அதிகமானாலும் நோய்!!

உடலுழைப்பு இல்லாத சட்டைமடியா (White Collar) பணியாளர்களுக்கு உடற்பயிற்சி மிக மிக அவசியம்.

தோற்றப்பொலிவு என்பது சுறுசுறுப்பை அடிப்படையாய் கொண்டது.

"நிற்கையில் நிமிர்ந்து நில்! நடப்பதில் மகிழ்ச்சி கொள்!" என்பார் பாவேந்தர். இயங்கிக் கொண்டே, செயல்பட்டுக்கொண்டே இருப்பவர்களுக்கு தோற்றப்பொலிவு தானாய் வரும்.

"நகையும் உவகையும் கொல்லும் சினம்" என்பார் திருவள்ளுவர். கோபம் நமது தோற்றப்பொலிவை உருக்குலைத்து விடும். ஒவ்வொரு நாளும் நமது உருவ ஆளுமை மேம்பட உடற்பயிற்சி, மனப்பயிற்சி செய்தல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக